This Article is From Mar 13, 2020

கொரோனா பாதிப்பு: டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது என அறிவிப்பு!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் உஹான் மாகாணத்தில் உள்ள உணவுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

கொரோனா பாதிப்பு: டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது என அறிவிப்பு!

டெல்லியில் இதுவரை கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
  • இந்தியாவில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • டெல்லியில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு
New Delhi:

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதனால், டெல்லியில் ஐபிஎல் உட்பட எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படாது என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு. 

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் சினிமா திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 200 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடக்கூடிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குக் காலவரையற்றத் தடை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு. 

டெல்லியில் இதுவரை கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை 70 பேருக்கு கொரோனை இருப்பதைச் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, விமான நிலையங்களில் 11 லட்சம் பேருக்கு கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவின் முன்னெச்சரிக்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 15 ஆம் தேதிவரை, குறிப்பிட சில விசாக்களைத் தவிர மற்ற அனைத்து விசாக்களுக்கும் தடை விதித்துள்ளது இந்திய அரசு. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் உஹான் மாகாணத்தில் உள்ள உணவுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை அந்த வைரஸ் தொற்றினால் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலக சுகாதார அமைப்பு, கொரோனா ஒரு ‘பேன்டமிக்' என்று பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியுள்ளது என்றும், பலரை இந்த நோய் பாதித்துள்ளது என்றும் அர்த்தம். 

.