மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 13ஆம் தேதி தமிழகம் வருகை தந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற ராகுல், ஜீன்ஸ் பேன்ட், டீ சார்ட் அணிந்து கல்லூரி மாணவர் போல அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கேள்வி கேட்ட மாணவி ஒருவரிடம் தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும் ராகுல் என்றே அழைக்கலாம் என்றும் கூறி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து பணமதிப்பிழக்கம், காஷ்மீர் விவாகரம் என மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதிலை தந்த ராகுல் மாணவிகளுக்கு பெரும் உற்சாகம் அளித்தார். கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பினராலும் ராகுல் பேச்சு பாராட்டப்பட்டது.
இதனிடையே, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ராகுலுக்கு அனுமதி அளித்தது எப்படி என்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்றும், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தர மண்டல இணை இயக்குனருக்கு, கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ராகுல் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியை கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையாக அனுமதி பெற்றே நடத்தப்பட்டது என்றும் அதில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் எதுவும் இல்லை என்றும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.