This Article is From Sep 13, 2019

காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட இல்லை: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அனுமதி பெறாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? எனவும் கேள்வி எழுப்பினர்

காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட இல்லை: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

பேனர் விழுந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்ப்பட்டது? காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட ஏன் எழுதவில்லை என நீதிபதிகள் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். 

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், காவல்துறை தரப்பில் பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையாளர் ஆல்பி வர்கீசும் ஆஜரானார். அவர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

“சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், பேனர் வைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்ப்பட்டது? காவல்துறை குறிப்பேட்டில் பேனர் பற்றி ஒருவரிகூட இல்லை. ஏன் எழுதவில்லை என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காவல் ஆய்வாளர், விபத்து நடந்த் பகுதியில் 4 பேனர்கள் இருந்தன. குறிப்பேட்டில் எழுத மறந்து விட்டேன் எனத் தெரிவித்தார்.

பிற்பகல் 2.30 மணிக்கு நடந்த விபத்து குறித்து மாலை 6 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் 18 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கும் ஆய்வாளர் ஒரு பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் அனுமதி பெறாமல் பேனர் வைத்திருப்பது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததா? எனவும் கேள்வி எழுப்பினர்

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். சுபஸ்ரீ குடும்பத்திற்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறீர்கள்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை. ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுப்பதை சிலர் நம்புகிறார்கள். உயிர்ப்பலி கொடுத்தால்தான் அரசு செயல்படுமா? விதிகளை மீறி பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்

.