This Article is From Aug 18, 2019

இளமையாக இருக்க இதுவே சிறந்த நேரம்: பூட்டான் மாணவர்களிடம் பிரதமர் மோடி பேச்சு!

கடந்த சனிக்கிழமை பூட்டானின் பிரதமரான லோடே ஷெரிங்கை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசினார் பிரதமர் மோடி.

இன்று மாலை இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி. 

New Delhi:

பூட்டானுக்குப் பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிலுக்கும் ராயல் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “பூட்டானில் இருக்கும் புத்திசாலிகள் நாட்டைப் பெரும் உயரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். இளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பான நேரம்” என்று பேசினார். 

பூட்டானுக்கு இரண்டாவது முறையாக பயணம் செய்துள்ளார் மோடி. இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற பின்னர் பூட்டானுக்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது. 

அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “பூட்டான், நாளுக்கு நாள் உயரத்தில் பறக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் உங்களது 130 கோடி நண்பர்கள் வெறுமனே, கைதட்டி உற்சாகமூட்டுவதை மட்டும் செய்ய மாட்டார்கள். அவர்கள் உங்களோடு இணைந்து செயல்படுவார்கள், உங்களிடமிருந்து அவங்கள் கற்றுக் கொள்வார்கள்.

உலகில் தற்போது பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் இன்று செய்யும் காரியம் அடுத்து வரும் தலைமுறைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது திறமையைக் கண்டுபிடித்து அதில் ஆர்வமுடன் செயல்படுங்கள்.” என்றார்.

இந்தியாவின் சந்திராயன்-2 மிஷன் குறித்து பேசிய பிரதமர் மோடி, “பூட்டானில் இருக்கும் பல இளம் விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து பூட்டானின் சொந்த செயற்கைக்கோளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது பெருமைக்குரியது. உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் வருவீர்கள் என நம்புகிறேன்” என்றார். 
 

கடந்த சனிக்கிழமை பூட்டானின் பிரதமரான லோடே ஷெரிங்கை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் 10 பல்வேறு திட்டங்களிலும் கையெழுத்திட்டார். விண்வெளி ஆராய்ச்சி, ஏவியேஷன், தொலைதொடர்புத் துறை, ஆற்றல் துறை, கல்வித் துறை உள்ளிட்டத் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இன்று மாலை இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி. 

.