This Article is From Jan 14, 2020

நிர்பயா வழக்கு: குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி முகேஷ் சிங்!

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு!

நிர்பயா வழக்கு: குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி முகேஷ் சிங்!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் ஜன 22ம் தேதி தூக்குத் தண்டனை பெற உள்ள நிலையில் அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் வினய் ஷர்மா மற்றும் முகேஷ் ஆகியோரின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முகேஷ் சிங் தற்போது, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு  அனுப்பியுள்ளார்.

முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜன.22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார்.

இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர். மருத்துவமனையில் படு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். 18 வயதுக்கு உட்பட்ட அவர், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை
செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளவுள்ளனர். 

இந்த வழக்கில் குற்றவாளிகள் மறு சீராய்வு மனுக்களை பலமுறை தொடர்ந்தனர். அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 

இதன்படி, குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேர் ஜனவரி 22-ம்தேதி காலை 7 மணிக்கு மரண தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர். 

.