This Article is From Jan 17, 2020

நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்!!

நிர்பயா வழக்கு : குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். இன்றைக்கு அனுப்பப்பட்டிருந்த மனு இன்றைக்கே நிராகரிக்கப்பட்டது. இதற்கடுத்த சில மணி நேரங்களில் புதிய உத்தரவு வெளிவந்துள்ளது.

நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு பிப். 1 காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றம்!!

கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தண்டனை நிறைவேற்றும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி நிர்பயா வழக்கில் முக்கிய திருப்பமாக குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ம்தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதுதொடர்பாக புதிய உத்தரவை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்த நிலையில் தண்டனை தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

2012 டிசம்பரில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று புதிய சிக்கல் ஏற்பட்டது. ஜனவரி 22 புதன்கிழமை காலை 7 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார். 

இதற்கிடையே, குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு, குற்றவாளிகளுக்கு எதிராக குடியரசு தலைவரிடம் பரிந்துரை செய்தது.

கருணை மனு காரணமாக குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்படுவது 14 நாட்கள் வரையில் தள்ளிப் போகலாம் என தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், இன்று மதியம் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதற்கடுத்த சில மணி நேரங்களில், பிப்ரவரி 1 காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று புதிய உத்தரவு வெளிவந்துள்ளது. 

முன்னதாக தண்டனை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது குறித்து நிர்பயாவின் தாயார் கூறுகையில், ‘கருணை மனு தாக்கல் செய்வதற்கு குற்றவாளிகளுக்கு உரிமை இருக்கிறது என்றால் மகளை 7 ஆண்டுகளுக்கு முன்பு மகளை இழந்த எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதற்காக கடந்த பல ஆண்டுகளாக பல நீதிமன்றங்களை நாடியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தெற்கு டெல்லி சாலையில் கீழே தள்ளி விடப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடைசியாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2012 டிசம்பர் 29-ம்தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டுக் கொண்டார். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது மீதமுள்ள 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

.