மே 5 மற்றும் மே 20 ஆகிய 2 நாட்களில் நீட் நடத்தப்பட்டது.
New Delhi: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் டெல்லிதான் சிறப்பான தேர்ச்சியை பெற்றுள்ளது. நீட்டில் டாப் 50 மாணவர்களில் 9 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள்.
மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் 74.92 சதவீத தேர்ச்சியை டெல்லி பெற்றிருக்கிறது. டெல்லியை சேர்ந்த பாவிக் பன்சால் 720-க்கு 700 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் முதல் 20 ஆண்களில் 4 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். நீட் தேர்வை எழுதுவதற்கு டெல்லியை சேர்ந்த 32,048 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1,833 பேர் தேர்வை எழுதவில்லை.
தேர்வை எழுதியவர்களில் 22,638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 74.92 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 73.73 சதவீதத்தை விட நடப்பாண்டில் கூடுதல் தேர்ச்சியை டெல்லி பெற்றுள்ளது.
இதற்கிடையே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் விரக்தியுற்ற தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் படித்த அவர் 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 490 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
இதேபோன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் முடிவுகளுக்கு தமிழக மாணவிகள் 2 பேர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.