This Article is From May 05, 2019

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்கள் கவனத்திற்கு..

NEET: கூடுதல் விவரங்களை www.nta.ac.in, www.ntaneet.ac.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்கள் கவனத்திற்கு..

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு(NEET) நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்வினை(NEET), 15 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 1 லட்சத்தி 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்தி 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். காலை 11.30 மணிக்கு தேர்வு மையம் திறக்கப்படும். தேர்வர்கள் 12.30 மணிக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு எந்த வித இடர்பாடும் இன்றி தேர்வறைக்கு செல்லலாம்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல உடை கட்டுப்பாடு தேர்வு மையத்துக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடு, தடை விதிக்கப்பட்டுள்ளது. எவை எவை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படும் என ஒரு பெரிய பட்டியலையே நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி அறிவித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க..

பிற்பகல் 1.15 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.

பிற்பகல் 1.30 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆதார் போன்ற அரசு அங்கிகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அரை கை கொண்ட லேசான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், ஆடைகளில் பெரிய பொத்தான்களோ, பேட்ஜ்களோ இருக்கக்கூடாது.

கலாசாரம், நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்தினுள் இருக்க வேண்டும்.

ஹீல்ஸ் அல்லாத செருப்புகளையே அணிய வேண்டும். ஷூக்களுக்கு அனுமதி கிடையாது.

துண்டு தாள்கள், பென்சில், பேனா, பர்சுகள், எழுத்து அட்டை, அழிப்பான், கால்குலேட்டர், கைப்பேசி, ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், கை கடிகாரம், கை செயின், கண்ணாடி, பெல்ட், தொப்பி, மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், பேட்ஜ், உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in, www.ntaneet.ac.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பின் ஆங்கில வினாத்தாளே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், கேள்வியில் தவறு இருப்பதாக கருதும்பட்சத்தில், ஆங்கிலத்தில் உள்ள கேள்வியையும் படித்துவிட்டு பதிலளிப்பது நல்லது.

.