Chandrayaan 2: விக்ரம்லேண்டர் இருக்கும் புகைப்படங்களை நாசா வெளியிட்டது.
சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னையை சேர்ந்த பொறியாளருக்கு நாசா நன்றியைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. எனினும், விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்து நாசாவின் விண்கலத்தாலும் கண்டறிய முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, நாசா கடந்த செப்.26ம் தேதி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, லேண்டர் தரையிரங்கும் முன் அதே பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், இந்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்ற ஐடியில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து, முதல்முறையாக லேண்டர் இருப்பதற்கு சாதகமான அடையாளத்தை கண்டுபிடித்ததாக தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாசா, லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் அறியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. விக்ரம் லேண்டரின் இருப்பிடம் குறித்து புகைப்படத்தையும் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
The #Chandrayaan2 Vikram lander has been found by our @NASAMoon mission, the Lunar Reconnaissance Orbiter. See the first mosaic of the impact site https://t.co/GA3JspCNuhpic.twitter.com/jaW5a63sAf
— NASA (@NASA) December 2, 2019
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
நாசாவின் விண்கலமான LRO விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது. அது மட்டுமன்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால், அந்தப் புகைப்படங்களில் விக்ரம் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை.
எனினும் எடுத்த அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இதனை LROC குழு விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு முன்பும், பின்பும் உள்ள புகைப்படங்களை கண்டறிய முயற்சித்தது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் கொண்ட கடின முயற்சியால், விக்ரம் லேண்டர் இருப்பிடம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக என்டிடிவியிடம் சுப்பிரமணியன் கூறும்போது, கடந்த அக்.3 ஆம் தேதி தான் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததை நாசாவுக்கு தெரியப்படுத்தினேன்.
தொடர்ந்து, இரண்டு மாதம் கூடுதலாக தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் நாசா அதிராப்பூர்வமாக அறிவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.