This Article is From Feb 18, 2019

நாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தை! - உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - ஆளுநர் கிரண்பேடி இடையே 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளது.

நாராயணசாமி - கிரண்பேடி பேச்சுவார்த்தை! - உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு!

புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் அவரின் தர்ணா போராட்டம் தொடர்கிறது. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

அவருக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக NDTV-க்கு அவர் அளித்த பேட்டியில், “நரேந்திர மோடியின் தூண்டுதலின்பேரில் கிரண்பேடி இந்த வேலைகளை செய்து வருகிறார். சதிக்கு மோடிதான் காரணம். ஒவ்வொரு நாளும் எங்களது அரசுக்கு கிரண் பேடி பிரச்னை அளித்து வருகிறார்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு வருவதாக நாராயணசாமியும் சம்மதம் தெரிவித்திருந்தார்

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஷ்வினிகுமார், அனைத்துத்துறை செயலர்களும் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சுமார் 2 மணி நேரமாக நீடிக்கும் இந்த பேச்சுவார்த்தையில் நாராயணசாமி - கிரண்பேடி இடையே உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

.