This Article is From Aug 20, 2019

நளினி பரோல் நீட்டிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நளினி பரோல் நீட்டிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளின் திருமண ஏற்படுகளை கவனிக்க நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் அளிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது. 

இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தாமதமாகி வருகிறது.

இந்தநிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.  ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை. 

எனவே, மகள் திருமணத்திற்காக 6 மாதங்கள் பரோல் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது, தமிழக அரசு தரப்பில், சிறை விதிகளின்படி 6 மாதம் பரோல் வழங்க முடியாது. பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது போல ஒரு மாதம் தான் விடுப்பு வழங்க முடியும் என்று கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை எனக்கூறி, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் நளினி. 

இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏற்கனவே பரோல் முடியும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தகவும் ஆனால் அந்த மனுவை ஆகஸ்ட்13ல் நிராகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிறை நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர். 


 

.