This Article is From Feb 06, 2019

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7ஆயிரம் விசாரணை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7,324 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி தெரிவித்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7ஆயிரம் விசாரணை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

காவலர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையை காவல் ஆணையர் துவங்கி வைத்துள்ளார்.

Chennai:

குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் முடித்து வைக்கப்பட்ட எப்ஐஆர்-களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, தலைமை பதிவாளர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் டிஜிபி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 603 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள டிஜிபி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் தேதியை குறிப்பிட விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.

.