போராட்டக்காரர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு முன்னர் ஊடகங்கள் வீடியோ கேமராவுடன் சம்பவ இடத்தில் குவிந்துள்ளன
சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், கிண்டியில் சிலர் சீன அதிபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள். அவர்கள் திபெத்தியர்கள் என்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்துள்ளது தமிழக காவல் துறை.
திபெத்தில் தொடர்ச்சியாக சீன அரசு அடக்குமுறையை ஏவிவிட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கிற்கு எதிராக தமிழகத்தில் வாழும் திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டனர். இதை முன்னரே அறிந்த இந்திய அரசு தரப்பு, சென்னையில் உள்ள திபெத்தியர்களின் பட்டியலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்துள்ளது.
பலருக்கு அரசு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக உணவு விடுதிகளில் பணிபுரியும் திபெத்தியர்கள் மீது உள்ளூர் போலீஸ் கண்காணித்து வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் கிண்டியில், சில திபெத்தியர்கள் இன்று காலை சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயத்தம் ஆகியுள்ளனர்.
அவர்கள், அதிபர் ஜின்பிங் வரும்போது கோஷம் எழுப்பியும், பதாகைகளை உயர்த்திப் பிடித்தும் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி அவர்கள் திட்டமிட்ட நிலையில்தான், போலீஸ் கண்ணில் தென்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு முன்னர் ஊடகங்கள் வீடியோ கேமராவுடன் சம்பவ இடத்தில் குவிந்துள்ளன. அப்போது அவர்கள் கேமராக்கள் முன்னர் ஆவேசமாக பேசியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிண்டியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர்.