This Article is From Oct 03, 2019

மோடி - சீன அதிபர் சந்திப்பு: தமிழக அரசு பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மத்திய, மாநில அரசுகள் பேனர் வைக்க முடிவெடுத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மோடி - சீன அதிபர் சந்திப்பு: தமிழக அரசு பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

வெளிநாட்டு தலைவர்களை வரவேற்று டெல்லியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம் தான் என தமிழக அரசு வாதம்


பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங்கை வரவேற்று மக்களுக்கு இடையூறின்றி பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசுகின்றனர். பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையின்போது, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 14 இடங்களில் அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே, தமிழத்தில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தமிழக அரசியலில் சர்ச்சையை
உருவாக்கியது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்மனுதாரர்களான திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பேனர் வைக்க அனுமதிக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் பேனர் வைக்க முடிவெடுத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு வெளிநாட்டு தலைவர்களை வரவேற்று டெல்லியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம் தான் என தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனினும் திமுக தரப்பு விதிகள் வகுக்கப்பட்டால், அதனை பொதுமக்கள் மதிப்பது போல தான் அரசும் பின்பற்ற வேண்டும் என கூறியது. 

இதைத்தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினர். விதிகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்கலாம் என்று கூறினர். 

.