This Article is From Nov 17, 2018

சத்தீஸ்கர் தேர்தல்: ராகுல் காந்தி குடும்பத்தை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

சத்தீஸ்கரில் வரும் செவ்வாய் கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது

சத்தீஸ்கரின் அமிகாபூரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்

ஹைலைட்ஸ்

  • ராகுல் காந்தி சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார் மோடி
  • காங்கிரஸ் காந்தி குடும்பத்திற்குத்தான் உழைத்தது, மோடி
  • இந்தியாவில் இருளில் வைத்திருந்தது காங்கிரஸ்தான், மோடி
Ambikapur, Chhattisgarh:

சத்தீஸ்கரில் வரும் செவ்வாய் கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அம்மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் காரசாரமான பிரசாரம் நடந்து வருகிறது. சத்தீஸ்கரில் நடந்த பிரசார சுற்றுப் பயணத்தில், மாநில பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்த ராகுல் காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ‘சத்தீஸ்கரில் ஊழல் மலிந்திருப்பதற்கும், கள்ள முதலாளித்துவம் தலைத் தூக்கியிருப்பதற்கும் காரணம் பாஜக தலைமையிலான சரண் சிங் அரசு தான். அது தூக்கியெறியப்பட வேண்டும்' என்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘சுதந்திர இந்தியாவை அதிக காலம் ஆட்சி புரிந்தது காந்தி குடும்பம் தலைமையிலான காங்கிரஸ் தான். ஆட்சியின் போது, அவர்களின் குடும்ப வளர்ச்சியை பிரதானப்படுத்தினார்களே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ராகுல் காந்தியிடம் கேட்கிறேன்… உங்கள் தாத்தா, பாட்டிதான் சத்தீஸ்கரை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றனரா? கடந்த 100 ஆண்டுகளாக உங்கள் குடும்பம் அதிகாரத்தில் இருக்கிறது. பல தலைமுறைகளாக நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. முதலில் நீங்கள் ஏன் சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவியுங்கள். பிறகு ரமண் சிங் குறித்து பேலாம்.

உங்களால் என்றுமே நாட்டு மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாது. ஒரு டீ விற்றவனால் மட்டுமே அந்தக் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்' என்று உரையாற்றினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதற்கட்ட தேர்தல் நடந்தது. வரும் செவ்வாய் கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. முதற்கட்ட தேர்தலுக்கு மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து கடும் அச்சுறுத்துல் இருந்தாலும், 76 சதவிகித வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

.