This Article is From Sep 11, 2019

“எல்லாத்துக்கும் காரணம் Ola, Uberதான்…”- நிதி அமைச்சரை விடாமல் துரத்தும் காங்கிரஸ்!

நிர்மலா சீதாராமனின் கருத்தை கேலி செய்யும் விதத்தில்தான் அபிஷேக் மனு சிங்வி, கருத்திட்டுள்ளார். 

“எல்லாத்துக்கும் காரணம் Ola, Uberதான்…”- நிதி அமைச்சரை விடாமல் துரத்தும் காங்கிரஸ்!

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

New Delhi:

இந்தியாவை நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்படி 5 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றும் என்று கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி. 

இது குறித்து அவர், “மோடிஜியை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனால், பொருளாதாரம் எப்படி 5 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறும்? இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று சொல்வீர்களா. ஓலா, உபர்தான் இந்த அனைத்துப் பிரச்னைக்கும் காரணம்” என்று கேலி செய்யும் விதத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார். 

அவர் இன்னொரு ட்வீட்டில், “பொருளாதாரத்தில் எதாவது நல்லது நடந்தால் அது மோடியால்தான். பொருளாதாரத்தில் எதாவது தீங்கு நடந்தால் அது நிர்மலா சீதாராமனால்தான். அப்புறம் எதற்கு உங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் கனரக வாகன விற்பனையிலும் 70 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள்' என்று தெரிவித்தார். 

நிர்மலா சீதாராமனின் கருத்தை கேலி செய்யும் விதத்தில்தான் அபிஷேக் மனு சிங்வி, கருத்திட்டுள்ளார். 


 

.