தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்துக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.
அங்கு, தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதலமைச்சர், அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரும் உடன் சென்றனர். இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் துபாய் சென்றடைந்தனர். அங்கு அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்காக சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் துபாயில் முகாமிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதையடுத்து, முதலமைச்சர் தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. அயல்நாட்டு அரசு முறை பயணம் தொடரும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர். சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய முதல்வர் பழனிசாமி, வெளிநாட்டவர்களை அவர்களின் உடையில் சென்று சந்தித்தால்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதால் கோட் சூட் அணிந்தேன். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், போன்று தமிழகத்தை மேம்படுத்தவே சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் என்றார்.