This Article is From Jul 24, 2018

கழிவறைக்குள் பைத்தான் பாம்பு - அலறிய இளைஞர்கள்

முகநூல் பதிவை கண்ட பாம்பின் உரிமையாளர்கள் ஜேம்ஸை தொடர்பு கொண்டுள்ளனர்

கழிவறைக்குள் பைத்தான் பாம்பு - அலறிய இளைஞர்கள்

வர்ஜீனியாவில் வசித்து வரும் ஜேம்ஸ் என்பவரின் வீட்டு கழிப்பறையில், பைத்தான் பாம்பு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அலறி அடித்து கொண்டு தன் நண்பனை எழுப்பிய ஜேம்ஸ், பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

பின்னர், தனது நண்பரின் உதவியுடன், மீன் பிடி கொக்கியில் கயிறு கட்டி பாம்பை பிடித்துள்ளார். கழிவறையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாம்பை பக்கெட்டில் வைத்து அடைத்துள்ளனர். பின்பு, வர்ஜீனியா கடல் உயிரினங்கள் அமைப்பை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்ஜீனியா கடல் உயிரினங்கள் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பை மீட்டனர். விஷமற்ற பால் பைத்தான் வகையை சேர்ந்த பாம்பு என்று தெரிவித்துள்ளனர்.

 
 

கழிவறையில் இருந்து பாம்பை வெளியேற்றிய காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் ஜேம்ஸ் பதிவிட்டிருந்தார். வெளியேற்றும் போது, பாம்பு அவர்களை தாக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

முகநூல் பதிவை கண்ட பாம்பின் உரிமையாளர்கள் ஜேம்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். செல்லப்பிராணியாக வளர்த்து வந்தவர்களிடம் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போன பாம்பு என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பிடிப்பட்ட பாம்பு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Click for more trending news


.