This Article is From Nov 18, 2018

’கஜா புயலால் 36 பேர் உயிரிழப்பு உச்சகட்ட வேதனை!’- மு.க.ஸ்டாலின் கொதிப்பு

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும் உள் மாவட்டங்கள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

’கஜா புயலால் 36 பேர் உயிரிழப்பு உச்சகட்ட வேதனை!’- மு.க.ஸ்டாலின் கொதிப்பு

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும் உள் மாவட்டங்கள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். மேலும் பலருக்கு அவர் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

இந்தப் பயணத்தை அடுத்து, தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின், ‘தானே, வர்தா, ஓகி வரிசையில் கஜா புயலும் பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை' என்று பதிவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘கஜா' புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வங்கக்கடலில் நிலைகொண்ட கஜா புயல் நேற்று நள்ளிரவில் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது வீசிய கடுமையான காற்றினால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல பகுதிகளில் மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்துள்ளன. கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சேதங்கள் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று திண்டுக்கல் அருகில் கஜா புயல் நிலைகொண்ட போது, அது காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று தென்கிழக்கு அரபிக் கடல் மார்க்கமாக நகர்ந்து, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கஜா புயல் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புயல் தமிழகத்தைக் கடந்து விடும் என்ற போதும் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம், ‘திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது.

.