This Article is From Apr 15, 2019

‘3 நாள்தான் இருக்கு! ஈகோ இல்லாமல் தேர்தல் வேலை பாருங்க!!’ : பிரேமலதா வேண்டுகோள்

வட சென்னையில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

‘3 நாள்தான் இருக்கு! ஈகோ இல்லாமல் தேர்தல் வேலை பாருங்க!!’ : பிரேமலதா வேண்டுகோள்

அதிமுக கூட்டணிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்பு உள்ளதாக பிரேமலதா கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கிறது. ஈகோ இல்லாமல் தேர்தல் பணியாற்றி எதிர்க்கட்சியை வீழ்த்த வேண்டும் என்று கூட்டணி கட்சியினருக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் வட சென்னை தொகுதியும் ஒன்று. இங்கு அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை ஆதரித்து கொளத்தூர் பகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

அதிமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக உள்ளது. தமிழகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

மக்களால் இது ராசியான கூட்டணி என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தாய்க்குலங்களின் ஆதரவும் நமக்கு இருக்கிறது.

40 தொகுதிகளிலும், 18 இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தேமுதிக வெற்றியடையச் செய்யும். வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை வெற்றி பெறச் செய்வது அதிமுக நிர்வாகிகளின் பொறுப்பு.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன. எதிரணியை வீழ்த்துவதுதான் நமது வியூகமாக இருக்க வேண்டும். நமக்குள் எந்தவித ஈகோவும் இல்லாமல் கூட்டணி வெற்றி பெற தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

.