This Article is From Apr 02, 2019

''நாட்டை பிளவுபடுத்தும் அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளன'' - அருண் ஜெட்லி

மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இருப்பதாக அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
  • மாவோயிஸ்ட் ஆதரவு அறிக்கையாக உள்ளதென ஜெட்லி குற்றச்சாட்டு
  • நடைமுறையில் சாத்தியமில்லை என்கிறார் அருண் ஜெட்லி
New Delhi:

நாட்டை பிளவுபடுத்தும் அம்சங்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார். 

மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 72,000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியத் திட்டம், முறைபடுத்தப்பட்ட மற்றும் எளிமையான ஜி.எஸ்.டி வரி முறை, அரசுத் துறையில் காலியாக இருக்கும் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்படும் என்னும் வாக்குறுதி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் நாட்டை பிளவுபடுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குற்றம் ஆகாது என்பதைப் போல காங்கிரசின் தேர்தல் அறிக்கைகள் இருக்கின்றன. 

காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்ற முடியாது. மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இருக்கின்றன. 

இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
 

.