This Article is From Apr 05, 2019

சொந்தமாக கார் இல்லை: வயநாடு வேட்புமனுவில் ராகுல்காந்தி தகவல்!

சொந்தமாக தனக்கு கார் இல்லை என வயநாடு வேட்புமனுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

சொந்தமாக கார் இல்லை: வயநாடு வேட்புமனுவில் ராகுல்காந்தி தகவல்!

ராகுலின் சொந்த தொகுதியான அமோதியை தவிர்த்து இரண்டாவதாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அவர் முதல்முறையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று ராகுல்காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின் போது, ராகுலுடன், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், வாக்கு சேகரித்தப்படி பேரணியாக சென்றனர். ராகுலையும், பிரியங்காவையும் காண வயநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சி பாகுபாடின்றி ஏராளமான மக்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்ட சொத்து மதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 9 கோடியில் இருந்து 16 கோடியாக ராகுலின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

மேலும் அதில், தன்னிடம் 5 கோடியே 80 லட்சத்தி, 58 ஆயிரத்தி 799 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், 10 கோடியே 8 லட்சத்தி, 18ஆயிரத்தி 284 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 15 கோடியே, 88 லட்சத்தி 77ஆயிரத்தி 83ஆயிரம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பல்வேறு வங்கிகளில் தனக்கு 77 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

.