This Article is From May 04, 2019

வேலைவாய்ப்பு, விவசாயம் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதிக்க தயாரா? ராகுல் கேள்வி

Lok Sabha elections 2019: 1999ல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாரை பாஜக அரசு விடுவித்தது குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தன்னுடன் விவாதத்தில் பங்கேற்க தயாரா என ராகுல் கேள்வி

New Delhi:

அடிப்படை பிரச்சனைகளான, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்த தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5ஆம் கட்ட தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் 1999ல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாரை பாஜக அரசு விடுவித்தது குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? காங்கிரஸ் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியதா? எந்த அரசு தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது?.காங்கிரஸ் அரசு மசூத் அசாரை பாகிஸ்தான் அனுப்பவில்லை. உண்மை என்னவென்றால், பாஜக தீவிரவாதிகளுடன் இணங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய விமானத்தை 180 பயணிகளுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 1999ல் கடத்தினர். அதை ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கினர். இந்த விவகாரத்தில் மசூத் அசார் மற்றும் இரண்டு தீவிரவாதிகள் இந்திய அரசால் விடுவிக்கப்பட்டன்னர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த மசூத் அசாரை சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து ஐ.நா புதனன்று அறிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வீடியோ கேமில் மட்டும்தான் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் மூலம் காங்கிரசை அல்ல, ராணுவத்தை அவமதித்திருக்கிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் நள்ளிரவில் பணமதிப்பிழக்கம் என்ற அதிர்ச்சியை தந்து ஏழை மக்களை கடுமையாக காயப்படுத்தினார். நாங்கள் நியாய் திட்டத்தின் மூலம் இழந்த பொருளாதாரத்தை மீண்டும் சீர்படுத்துவோம். மக்கள் கையில் பணம் எளிதில் சென்றடையும், அதனை அவர்கள் உடனடியாக செலவு செய்வார்கள். இது பொருளாதாரம் வளருவதற்கு உதவியாக இருக்கும்.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் அவர் நினைப்பது போல, நரேந்திர மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல. இப்போது நாட்டின் பெரும் பிரச்னையாக இருப்பது வேலை வாய்ப்பின்மை, மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அது என்னவானது என்று நாடு, மோடியை கேட்கிறது. ஆனால், விவசாயிகள் பற்றியும் வேலை வாய்ப்பின்மைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

இப்படி அடிப்படை பிரச்சனைகளான, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம், ஊழல் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்த தயாரா? எனக்கு ஒரு 10 நிமிடம் ஒதுக்குங்கள்.. எங்கு வைத்து வேண்டுமானாலும் விவாதிக்க தயார். ஆனால், அனில் அம்பானி வீட்டில் வேண்டாம் என்று அவர் கூறினார்.

Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal

.