உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில், தற்போது மக்களவைத் தேர்தல் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலை சரிபார்க்க, மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆட்களும் நேரமும் இல்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தொகுதி பங்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் இப்போது மக்களவை தேர்தலை காரணம் காட்டி, தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, தூய்மை காவலர்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.