This Article is From Jan 21, 2019

கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது: ஜெயக்குமார்

கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது: ஜெயக்குமார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இதையடுத்து, கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்.பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்று கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தி, பின்னர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம் நீதிபதி, என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல் துறையினர் அளித்த பதிலும், உரிய ஆதாரங்களும் போதுமானதாக இல்லை எனவும் சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? என சரமாரி கேள்வி எழுப்பினார். மேலும் சயான், மனோஜை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமீன் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள். அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் திமுக செயல்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவரிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது, தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும். கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது. கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர். பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி அதிமுக. தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகளின் நிலைப்பாட்டில் மாறுபாடு இருக்கும் என்று அவர் கூறினார்.

.