This Article is From Jun 05, 2020

‘கேரள கர்ப்பிணி யானை மதவெறியனால் கொல்லப்பட்டது!’- சர்ச்சையைக் கிளப்பும் எச்.ராஜா

யானை இறந்த சம்பவம் குறித்து குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்

‘கேரள கர்ப்பிணி யானை மதவெறியனால் கொல்லப்பட்டது!’- சர்ச்சையைக் கிளப்பும் எச்.ராஜா

சிகிச்சை பலனின்றி கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது.

ஹைலைட்ஸ்

  • கர்ப்பிணி யானை பாலக்காடு மாவட்டத்தில் இறந்தது
  • அன்னாசிப் பழத்தில் வெடி வைத்துக் கொடுத்ததால் யானை இறந்தது
  • இந்திய அளவில் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது

கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்தது 15 வயதான யானை. அந்த யானை கருவுற்றிருந்தது. உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அது சென்றது. அங்கு கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர். ஆனால் சில விஷமிகள், அன்னாசிப் பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்துச் சிதறியது. 

இதைத் தொடர்ந்து  கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “பாலக்காடு மாவட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில், கர்ப்பிணி யானை உயிரிழந்துள்ளது. நிறைய பேர் எங்களிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். உங்களின் ஆதங்கம் வீணாகாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். நீதியே வெல்லும்.

அதே நேரத்தில் இந்த துன்ப சம்பவத்தை வைத்து சிலர் வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சரியான தகவல்கள் தெரியாமல் உண்மையை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். சிலர் இதை வைத்துப் சமூகப் பிரிவினையை ஏற்படுத்த முயன்றுள்ளனர். அது மிகத் தவறான செயலாகும்.

நீதி மறுக்கப்பட்டால் அதை எதிர்த்துக் கொதித்தெழும் சமூகம் கேரளம். இந்த மொத்த விவகாரத்தில் இருக்கும் ஒரேயொரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், நீதி மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க முடியும் என்பதுதான். மறுக்கப்படும் நீதிக்கு எதிராக போராடும் மக்களாக நாம் இருப்போம். எங்கும், எப்போதும்…” என்று உணர்ச்சிப் பொங்க விளக்கம் அளித்துள்ளார். 

இப்படிப்பட்ட சூழலில், யானையின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

.