This Article is From Oct 22, 2019

சிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram..? - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்!

INX media corruption case - சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ விசாரணை அமைப்பு, ஐ.என்.எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

சிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram..? - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்!

INX media corruption case - இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. 

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambaram) எதிராக சிபிஐ அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தனது தந்தையின் மனநிலை குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார் கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram). 

சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ விசாரணை அமைப்பு, ஐ.என்.எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம், சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் இந்த நடவடிக்கைகள் குறித்து பேசிய கார்த்தி, “அரசியல் பழிவாங்கலுக்காக எங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கிலிருந்து வெளியே வருவோம் என்கிற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று உறுதிபட தெரிவித்தார். 

குற்றப்பத்திரிகையில் சிதம்பரம் உட்பட 14 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன், சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வரம் நிலையில், நீதிமன்றத்தின் முன்னர் அன்றே அவர் ஆஜர்படுத்தப்படுவார். 

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரம் ரூ. 9.96 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும், பீட்டர் முகர்ஜி, முன்னாள் நிதி ஆயோக் தலைவர் சிந்துஸ்ரீ குல்லர், ஐ.என்.எக்ஸ். மீடியா, ஐ.என்.சி. நியூஸ், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அட்வான்டேஸ் ஸ்ட்ராடஜிக் கல்னல்டிங், முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய அரசு அதிகாரிகள் அஜித் குமார் டங்டங், ரவிந்திர பிரசாத், பி.கே.பக்கா, பிரபோத் சக்சேனா, அனூப் கே புஜாரி, சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் எஸ். பாஸ்கர ராமன் ஆகியோரும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனர். குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், லஞ்சம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் ப.சிதம்பரத்தின் மனநிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு கார்த்தி சிதம்பரம், “வழக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எல்லாம் பார்த்து அவர் சலனப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க அவர் தயாராகவே இருக்கிறார். அவர் மன ரீதியாக மிகவும் உறுதியாக இருக்கிறார்” என்று விளக்கினார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்துள்ளனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அரசியல் பழிவாங்குதல் காரணங்களுக்காக தன்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 


 

.