This Article is From Jan 10, 2019

உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்! - ரஜினிகாந்த் பேட்டி

’பேட்ட’ திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த பெருமை கார்த்திக் சுப்புராஜையே சாரும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்! - ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பேட்ட' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் போன்ற பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள 'பேட்ட' படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களின் ஆரவாரத்துடன் ‘பேட்ட' சிறப்பு காட்சிகள், திரையிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, இன்றைய அனைத்து காட்சிகளும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 'பேட்ட' திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, எல்லாருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்! பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன், ரொம்ப மகிழ்ச்சி.

அனைத்து பெருமையும் சன் பிக்சர்ஸ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினரையே சேரும். ரசிகர்களுக்கு படம் பிடித்தால் ரொம்ப சந்தோஷம், அது தான் முக்கியம். அவர்களை சந்தோஷப்படுத்துவதே என் வேலை.

அனைத்து பெருமையும் கார்த்திக் சுப்புராஜையே சேரும். அவர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு காட்சிகளையும், உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார் என்று அவர் கூறினார்.

.