This Article is From Jul 22, 2019

"அதிகாரத்தில் நீடிக்க முயற்சிக்கவில்லை"; குமாரசாமி! - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?

"நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதத்திற்கு நேரம் தேடுவதற்கான எனது ஒரே நோக்கம், அறநெறியைப் பற்றி பேசும் பாஜக, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளை எவ்வாறு தகர்த்தெறிய முயற்சிக்கிறது என்பதை முழு நாட்டிற்கும் தெரியப்படுத்துவதற்கே" என்று குமாரசாமி கூறியுள்ளார்

வெள்ளிக்கிழமையன்று சட்டப்பேரவையில் பேசிய குமாரசாமி.

Bengaluru:

கர்நாடகாவில் பலவீனமாக உள்ள ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசின் தலைவிதி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது. 

இதனிடையே, ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் குமாரசாமி எவ்வளவோ வலியுறுத்தியும், அதனை பொருட்படுத்தாத அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். 

இதுதொடர்பாக பேசிய பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, குமாரசாமி அரசுக்கு இன்றைய தினமே கடைசி தினம் என்று கூறியவர், முதல்வர் தன்னை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும், காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணிக்கு ஒரு சிறு ஆறுதலாக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரையும், நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்-ஜேடிஎஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவுறுத்தியுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் மூலம் எதேனும் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொடர்பான விவாதத்தை அரசாங்கம் இன்னும் நீடிக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், குமாரசாமி ஞாயிற்றுக்கிழமை "அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயற்சிக்கவில்லை" என்று கூறினார். 

"நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதத்திற்கு நேரம் தேடுவதற்கான எனது ஒரே நோக்கம், அறநெறியைப் பற்றி பேசும் பாஜக, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளை எவ்வாறு தகர்த்தெறிய முயற்சிக்கிறது என்பதை முழு நாட்டிற்கும் தெரியப்படுத்துவதற்கே" என்று குமாரசாமி கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஏற்கனவே ஆளுநர் விதித்த கெடுவை புறக்கணித்த நிலையில், அன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என ஆளுநர் விதித்த அடுத்த கெடுவும் புறக்கணிக்கப்பட்டது. 

இதனிடையே, வெள்ளியன்று, சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, பாஜகவை கடுமையாக எச்சரித்தார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக தெரிவித்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ரூ.40-50 கோடி வரை வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார். இதனிடையே, பேசிய எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்த குமாரசாமி, '14 மாதம் ஆட்சியில் இருந்த நாங்கள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டோம். சில விஷயங்களை விவாதிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம். அதற்கு அவரசம் இல்லை. அதனை நீங்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் மேற்கொள்ளலாம். நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை' என்று அவர் கூறினார். 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும். 

.