This Article is From Jul 19, 2019

ஆளுநரின் கெடுவை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம்!

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம், அதற்கு அவரசம் இல்லை - குமாரசாமி

Bengaluru:

சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து ஆளுநர் வாஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அளித்த நிலையில், ஆளுநரின் கெடுவை கண்டுகொள்ளாமல் கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம் காட்டி வருகிறது.  

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வாஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அளித்துள்ளார். 

இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, பாஜகவை கடுமையாக எச்சரித்தார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக தெரிவித்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ரூ.40-50 கோடி வரை வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார். இதனிடையே, பேசிய எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்த குமாரசாமி, '14 மாதம் ஆட்சியில் இருந்த நாங்கள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டோம். சில விஷயங்களை விவாதிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம். அதற்கு அவரசம் இல்லை. அதனை நீங்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் மேற்கொள்ளலாம். நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை' என்று அவர் கூறினார். 

இதனிடையே, நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்திலே நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று சட்டப்பேரவை கூடியதும் முதல்வர் குமாரசாமி தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். தமது ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டினார். அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் ஆளும் கட்சி தாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்ட நிலையில், நேற்று மாலைக்குள் நடத்துமாறு சபாநாயகரை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் பேரவையிலேயே உறங்கினர். இதற்காக சிலர் தலையணை, படுக்கை விரிப்புடன் பேரவைக்கு வந்திருந்தனர். பெரும்பாலான பாஜக உறுப்பினர்கள் இந்தத் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களும் ஆஜராகி இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும். 
 

.