தவறுகளை தட்டி கேட்போம் ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள் - கமல்ஹாசன்
Chennai:
அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்ட போகின்றதோ? இந்த மாதிரி ஆட்கள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட பயமும், மரியாதையும் கிடையாது என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுகவினர் வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா. வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரண செய்தியை பெற்றவர்களிடம் சொல்வதுதான். சுபஸ்ரீ மரண செய்தி அப்படிப்பட்டதுதான். தன்னுடைய பிள்ளையின், ரத்தம் சாலைகளில் சிந்திக் கிடப்பதை பார்க்கும்போது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருடைய மனதிலும் திகில் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். பெண்ணை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இதுபோன்ற பல ரகுக்களும், சுபஸ்ரீகளும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டுள்ளனர். ஏங்க கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா..? எங்கே பேனர் வைக்க வேண்டும் வைக்கக்கூடாது என்பது கூடவா உங்களுக்கு தெரியாது.
இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்ட போகின்றதோ? எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பது.. தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்று மிரட்டுவதும்தான், இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்கள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட பயமும், மரியாதையும் கிடையாது.
தவறுகளை தட்டி கேட்போம் ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, அந்த தவறுகளை தட்டிக் கேட்டு, தீர்வும் தேடித் தர முற்படும்.
தலைவர்களை நாங்கள் தான் தேர்வு செய்வோம், ஆனால் நாங்கள் காலம் முழுக்க அடிமையாகத்தான் இருப்போம் என்று சொன்னால் அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் கிடையாது.
உங்களை, சாதாரண மக்கள்.. சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே, அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.
வாருங்கள்..! தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமுறையை உருவாக்குவோம். நாளை நமதே! இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.
(With inputs from PTI)