This Article is From Apr 25, 2019

தலைமை நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்!

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்ற ஊழியர் முன்வைத்த புகாரை விசாரிக்க நீதிபதி பாப்டே தலைமையில் செவ்வாயன்று 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்!

தலைமை நீதிபதி விவகாரம் குறித்த 3 பேர் விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.

New Delhi:

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்கும் 3 பேர் கொண்ட விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகி உள்ளார்.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி மீது புகார் கூறிய அந்த பெண் ஊழியர் எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நெருங்கிய நண்பர், ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர் அவர் அந்த விசாரணை குழுவில் இருந்து விலக வேண்டும், அந்த குழுவில் மேலும் பெண் நீதிபகள் இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அடுத்து இரண்டாம் மூத்த நீதிபதியாக இருப்பவர் நீதிபதி பாப்டே, தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகார் குறித்து பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்டு குழு விசாரணை நடத்த உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சிறப்பு அமர்வு கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, தம் மீதான புகார்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய சக்தி இருப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி பாப்டே தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் செவ்வாயன்று உத்தரவிட்டார். ரஞ்சன் கோகாய்க்கு பிறகு, தலைமை நீதிபதியாக இருக்கும் பாப்டே, தனது விசாரணை குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரை இணைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து நீதிபதி பாப்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு என்னை நியமித்துள்ளார்.

நானும், உச்சநீதிமன்றத்தில் எனக்கு அடுத்து மூத்த நீதிபதியாக விளங்கும் என்.வி.ரமணா, பெண் நீதிபதியான இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழுவை விசாரணைக்கு ஏற்படுத்த முடிவு செய்துள்ளேன்.

இந்த குழுவினர், ரகசிய அறையில், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக அந்த பெண்ணுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என நீதிபதி பாப்டே தெரிவித்ததிருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர் என்றும் அதனால், இந்த குழுவில் நான் இருப்பது சரியாக இருக்காது என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.
 

.