This Article is From Jun 25, 2019

“எல்லாம் ஓவர்..!”- அகிலேஷ் உடனான கூட்டணிக்கு குட்-பை சொன்ன மாயாவதி!

உத்தர பிரதேசத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்து இடைத் தேர்தல் நடக்க உள்ளது.

“எல்லாம் ஓவர்..!”- அகிலேஷ் உடனான கூட்டணிக்கு குட்-பை சொன்ன மாயாவதி!

உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் 15-ஐ மட்டுமே இரு கட்சிகளின் கூட்டணி கைப்பற்றின.

New Delhi:

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள மாயாவதி, “இனி வரும் அனைத்துத் தேர்தல்களும், பெரியதோ சிறியதோ நாம் தனியாகவே போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார். தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும், அகிலேஷ் மீதான விமர்சனங்கள் குறித்தும் பல ட்வீட்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் மாயாவதி. 3 வாரங்களுக்கு முன்னர்தான், ‘அகிலேஷ் உடனான கூட்டணி தொடர வாய்ப்புள்ளது' என்று மாயாவதி கூறியிருந்தார். இந்நிலையில் இப்படியொரு தடாலடியான முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் உத்தர பிரதேச மாநிலத்தின் பல சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

“சமாஜ்வாடி கட்சியுடன் நமக்கிருந்த அனைத்து கசப்பான சம்பவங்களும் தள்ளிவைக்கப்பட்டன. குறிப்பாக 2012 முதல் 2017 வரை தலித்துகளுக்கு எதிராக, பி.எஸ்.பி-க்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மறந்துவிட்டு கூட்டணி அமைத்தோம். பொது நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி நடந்து கொண்ட விதத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர்களுடன் சேர்ந்து நம்மால் பாஜக-வை வீழ்த்த முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே கட்சியின் நலனுக்காக அடுத்து வரும் தேர்தல்களை தனியாக எதிர்கொள்ளும்” என்று ட்வீட் மூலம் காட்டமான கருத்துகளை கூறியிருந்தார். 

மாயாவதி, தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் முடிவுக்குப் பின்னர் அகிலேஷ் யாதவ், என்னை போன் மூலம் கூட அழைத்துப் பேசவில்லை. அவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோதே, யாதவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்பட்டவர்” என்று குற்றம் சாட்டினார். 

49eoq4d8


உத்தர பிரதேசத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்து இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தொகுதிகளில் இருக்கும் தலித்துகளின் வாக்குகளைக் கவரவே மாயாவதி இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சென்ற ஆண்டு கோராக்பூர் மற்றும் புல்பூரில் நடந்த இடைத் தேர்தல்களின்போதுதான் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி முதன்முறையாக அமைந்தது. அந்தக் கூட்டணி பாஜக-வை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. இதைத் தொடர்ந்துதான் இரு கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கூட்டணி வைத்தன. ஆனால், பொதுத் தேர்தலில் கூட்டணியின் வெற்றி சாத்தியப்படவில்லை. 

உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் 15-ஐ மட்டுமே இரு கட்சிகளின் கூட்டணி கைப்பற்றின. பாஜக மொத்தமாக 62 இடங்களைப் பிடித்தது. “தேர்தல் தோல்விக்கு சமாஜ்வாடிதான் காரணம். அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களின் ஓட்டுகள் எங்கள் வேட்பாளர்களுக்கு விழவில்லை” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மாயாவதி. 2014 தேர்தலில் மாயாவதியின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 2019 தேர்தலில், அந்தக் கட்சி 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. 

.