This Article is From Jun 20, 2019

ஐஎஸ்ஐஎஸ் வியூகத்தில் மாற்றம்! இந்தியா, இலங்கைக்கு அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை!

ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவல் குறித்து மாநில உளவுத்துறை மூலம் கேரளாவின் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு 3 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் நுழையாமல் இருக்க கேரள கடலோர பகுதிகள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தல்

Thiruvananthapuram:

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால், கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இராக் மற்றும் சிரியாவில் தங்கள் முகாமை இழந்ததை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளை நோக்கி ஐஎஸ்ஐஎஸ் கவனம் செலுவத்துவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, கேரளாவின் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உளவுத்துறை எழுதிய 3 கடிதங்களில் ஒன்றில், இராக் மற்றும் சிரியாவில் தங்கள் முகாமை இழந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், தொடர்ந்து ஜிகாத்களை தங்கள் சொந்த நாட்டில் இருந்தே தொடருமாறு செயல்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

மற்றொரு கடிதத்தில், "கொச்சியில் உள்ள முக்கிய ஷாப்பிங் மால்களை தாக்குவது ஐஎஸ்ஐஎஸ்-ன் இலக்காக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, கேரளம் மற்றும் தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.

அண்மையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக கோவையில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரளத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று என்ஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளதால் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.

கடந்த மே மாதம், இலங்கையின் உளவுப்பிரிவினர் அளித்த தகவலின்படி, கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.