This Article is From May 14, 2019

3ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்!

3ஆம் அணி உருவாகுமா என்பது மே.23ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி விருகிறார். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை அவர் சந்தித்து பேசினார். ஸ்டாலினை சந்திக்க வந்தபோது அவர் தேர்தல் பிரசாரத்தில் இருந்ததால் சந்திக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் இடையிலான சந்திப்பு நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது கூட்டாட்சி அமைக்க ஸ்டாலினிடம் சந்திர சேகர ராவ் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் தரப்பில் சந்திர சேகர ராவ் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர ராவ், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துச் சென்றுவிட்டார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

சந்திரசேகர் ராவ் 3வது அணி அமைப்பதற்காக என்னை சந்திக்க வரவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். 3-ஆம் அணிக்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அணி அமையுமா என்பது மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே முடிவு செய்யப்படும்.

சந்திரசேர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை கூறியது குறித்து கேள்வி எழுப்பிய போது, அவருக்கு இந்த சந்திப்பு தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் கூறினார்.

.