This Article is From Nov 04, 2019

திருக்குறளை தப்பின்றி சொல்ல முடியுமா? மு.க.ஸ்டாலினை விமர்சித்த தமிழக பாஜக!!

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் என தெரிவித்துள்ளது.

திருக்குறளை தப்பின்றி சொல்ல முடியுமா? மு.க.ஸ்டாலினை விமர்சித்த தமிழக பாஜக!!

திருக்குறளை தப்பின்றி சொல்ல முடியுமா? மு.க.ஸ்டாலினை விமர்சித்த பாஜக

எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரிக்க முடியுமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு தமிழக பாஜக கடுமையாக கிண்டல் செய்துள்ளது. 

முன்னதாக, தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?

அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்த பதிவில், திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படத்தையும் பாஜக வெளியிட்ட நிலையில் அதனை திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என கூறியிருந்தார். 

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்தை டேக் செய்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது. அதில், யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாக பொருளுடன் உச்சரித்தால், அந்த பதிவை நீக்கி விடுகிறோம் என தெரிவித்துள்ளது.

.