This Article is From Oct 19, 2019

INX Media Case : ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு!!

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • INX Media வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது
  • INX மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக பணம்பெற சிதம்பரம் உதவியதாக புகார்
  • ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ சிதம்பரத்தை கைது செய்தது
New Delhi:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் வெளிநாட்டு நிதியை சட்டவிரோதமாக பெற்றுத் தருவதற்கு ரூ. 9.96 லட்சத்தை சிதம்பரம் பெற்றார் என்று சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 15 பேரை சிபிஐ சேர்த்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரம் ரூ. 9.96 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும், பீட்டர் முகர்ஜி, முன்னாள் நிதி ஆயோக் தலைவர் சிந்துஸ்ரீ குல்லர், ஐ.என்.எக்ஸ். மீடியா, ஐ.என்.சி. நியூஸ், செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அட்வான்டேஸ் ஸ்ட்ராடஜிக் கல்னல்டிங், முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய அரசு அதிகாரிகள் அஜித் குமார் டங்டங், ரவிந்திர பிரசாத், பி.கே. பக்கா, பிரபோத் சக்சேனா, அனூப் கே புஜாரி, சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் எஸ். பாஸ்கர ராமன் ஆகியோரும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்னர். 

குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், லஞ்சம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியதால் அவரது பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது இந்திராணியும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் இந்திராணியின் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 5-ம்தேதி வரை திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்துள்ளனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அரசியல் பழிவாங்குதல் காரணங்களுக்காக தன்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

.