This Article is From Nov 13, 2019

INX Media Case : சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு!!

அமலாக்கத்துறையின் காவல் முடிந்ததை தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

INX Media Case :  சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு!!

கடந்த மாதம் 16-ம் தேதிமுதல் சிதம்பரம் அமலாக்கத்துறையின் காவலில் இருந்து வருகிறார்.

New Delhi:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மீதான அமலாக்கத்துறையின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

இந்த விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கின் கீழ் சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இருப்பினும், அமலாக்கத்துறையும் அவரை விசாரித்து வந்ததால் சிதம்பரத்தின் காவல் நீடித்து வந்தது. அவரை கடந்த மாதம் 16-ம்தேதி அமலாக்கத்துறையினர் தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

அக்டோபர் 16-ம்தேதிக்கு பின்னர் சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, சிதம்பரத்தின் காவலை மேலும் 14 நாட்கள், அதாவது நவம்பர் 27-ம்தேதி வரைக்கும் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார். 
 

.