காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது.
ப. சிதம்பரத்தின் வீட்டு சுவர் ஏறி சிபிஐ அதிகாரிகள் குதித்தது என்பது, இந்தியாவுக்கே அவமானம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தின் மீதான நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் திமுக சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு எதிர்க்கட்சியினர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
திமுகவின் அழைப்பை ஏற்று டெல்லி போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்த காட்சிகளை பார்த்தேன். சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்திருப்பது என்பது இந்திய நாட்டிற்கே அவமானமாக நான் கருதுகிறேன். அது கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக திமுக தரப்பில் வழக்கு தொடரப்படவில்லை. முறையாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்தோம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு திமுக காரணம் அல்ல. அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.