This Article is From Jun 17, 2020

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலி!

எளிய குடும்பத்தை சேர்ந்த பழனி, பி.ஏ. படிப்பை தொலைதூரக்கல்வி மூலமாக, ராணுவத்தில் பணியாற்றியவாறே முடித்துள்ளார். அவரது சகோதரர் இதயக்கனியும் ராணுவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

மறைந்த பழனிக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். அவரது மகனும், ராணுவத்தில் சேர வேண்டும் என்பது பழனியின் விருப்பமாக இருந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • இன்னும் ஓராண்டில் ஹவில்தார் பழனி ஓய்வு பெறுவதாக இருந்தார்
  • பழனிக்கு ஒரு மகன், மனைவி, மகள் ஆகியோர் உள்ளனர்
  • மகனும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென பழனி விரும்பினார்
Chennai:

லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர்.

அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படும் நிலையில், சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், முழு அரசு மரியாதையுடன் ஹவில்தார் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

உயிரிழந்த பழனி, சமீபத்தில்தான் புதிய வீடு ஒன்றை கட்டி முடித்தார். ஓய்வுக்கு பின்னர் புதிய வீட்டில் குடிபெயரலாம் என்று நினைத்திருந்தார். அவர் அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், வீர மரணம் அடைந்திருக்கிறார்.

ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி பழனி சேவை செய்திருக்கிறார். கடந்த 12-ம்தேதிதான் அவரது புதிய இல்லத்தின் புதுமனை புகுவிழா நடந்துள்ளது.

எளிய குடும்பத்தை சேர்ந்த பழனி, பி.ஏ. படிப்பை தொலைதூரக்கல்வி மூலமாக, ராணுவத்தில் பணியாற்றியவாறே முடித்துள்ளார். அவரது சகோதரர் இதயக்கனியும் ராணுவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

மறைந்த பழனிக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். அவரது மகனும், ராணுவத்தில் சேர வேண்டும் என்பது பழனியின் விருப்பமாக இருந்துள்ளது.

எல்லையில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பழனியின் உடல் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கும் சூழலில், இறுதி அஞ்சலிக்காக ஊர்ப் பொது மக்கள் தயாராகியுள்ளனர். கடுக்கலூர் கிராமம் சோகத்தில் மூழ்கி காணப்படுகிறது.

.