This Article is From Apr 21, 2020

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த்

அப்படி இருக்கும்போது மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்: விஜயகாந்த்

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன்
  • எனது கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்
  • கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான்

கொரோனாவால் உயிரிழப்போர் உடலை அடக்கம் செய்ய இடம் தரத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சென்னை அம்பத்தூரில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அம்பத்தூருக்கும், திருவேற்காடுக்கும் ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயாகாந்த் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து மேலும், அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும், ஒருநாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். 

அப்படி இருக்கும்போது மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும். கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான், ஆனால், மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த  நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

.