This Article is From Mar 07, 2019

நொந்து போயுள்ள தேமுதிகவினரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை! - துரைமுருகன்

நொந்து போயுள்ள தேமுதிகவினரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

நொந்து போயுள்ள தேமுதிகவினரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை! - துரைமுருகன்

முன்னதாக, மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, தேமுதிக சார்பில் அதிமுக, பாஜக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடன் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக மேடையில் விஜயகாந்த் படங்களும் வைக்கப்பட்டு, பின்னர் அகற்றப்பட்டது.

இதனிடையே, தேமுதிக நிர்வாகிகள் மோகன் ராஜ், இளங்கோவன், முருகேசன் ஆகியோர் நேற்று பிற்பகல் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம் சென்று பேச்சுவார்தை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்து திமுக கூட்டணிக்கு வர விரும்புவதாக தெரிவித்தாகவும், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதால், சீட் இல்லை என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ், துரைமுருகனுடனான நேற்றைய தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்றும் முருகேசன் மற்றும் இளங்கோவன் துரைமுருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங்களுக்காக என்றார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், தேமுதிகவினர் தங்களை காப்பாற்றி கொள்ள தற்போது மாற்றி பேசுகின்றனர். தேமுதிகவினர் இப்படி மாற்றி, மாற்றி பேசுவதை பார்த்தால் தேமுதிகவை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறுவழியில்லை.

எதிர்பார்த்தபடி கூட்டணி அமையாததாலும், தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலும் அவர்கள் மிகவும் நொந்து போயுள்ளனர். இப்படி நொந்து போயுள்ள தேமுதிகவினரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை என்று அவர் கூறினார்.


 

.