This Article is From Jun 06, 2020

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம்; அரசு நிர்ணயம்!

அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம்; அரசு நிர்ணயம்!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம்; அரசு நிர்ணயம்!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் தமிழகம் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 256-ல் இருந்து 28 ஆயிரத்து 694 ஆக உயர்ந்திருக்கிறது. 

குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 86 பேருக்கும், காஞ்சிரபுத்தில் 15 பேருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் விரைவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், 

Grade- A1 மற்றும் A2ல் (பொது வார்டு) அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.     

Grade - A3 மற்றும் A4 அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade- A1 மற்றும் A2, Grade - A3 மற்றும் A4ல் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) உள்ளவருக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. 

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு  மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.