This Article is From Sep 12, 2018

மாவோயிஸ்ட் தொடர்பு: கைதான 5 பேரின் காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு

5-பேரின் வீட்டுக் காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மாவோயிஸ்ட் தொடர்பு: கைதான 5 பேரின் காவல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு
New Delhi:

மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டிருக்கும் 5- பேரின் காவலை செப்டம்பர் 17-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் புனே போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில், தெலுங்கு மொழி கவிஞர் வரவர ராவ், மனித உரிமை ஆர்வலர்கள் வெர்னோன் கோன்சல்ஸ், அருண் ஃபெரேரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த வாரம் ஆஜரான மகாராஷ்டிர காவல் துறை, “கைது செய்யப்பட்டவர்களுக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் உண்டு. அதற்காக அவர்களை கைது செய்யவில்லை. மிகவும் கொடூரமான குற்றச் செயல்களை செய்யக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை கைது செய்தோம். 5-பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப், பென் டிரைவ் மெமரி கார்டு ஆகியவற்றில் நாங்கள் கைது செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இதன் மூலம் கைதான 5 பேரும் மாவோயிஸ்ட் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் மட்டுமல்ல; சமூகத்தை சீர்குலைக்கும் சதித் திட்டங்களை உருவாக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது“ என்று தெரிவித்தனர்.

வீட்டுச் சிறையில் 5-பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 5-பேரின் வீட்டுக் காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

.