This Article is From Jun 19, 2019

கொல்கத்தாவில் முன்னாள் மிஸ் இந்தியாவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்!

கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து எனது சக ஊழியருடன் ஊபர் கேப்பில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, ஒரு கும்பல் எங்களை பின்தொடர்ந்து என உஷோஷி செங்குப்தா தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்க சென்றால், வேறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் படி காவலர்கள் தெரிவித்தனர்.

ஹைலைட்ஸ்

  • கொல்கத்தாவில் முன்னாள் மிஸ் இந்தியா உஷோஷி செங்குப்தா, இரவில் ஊபர் கேப்பில
  • அவர் எடுத்த அந்த வீடியோவில் 3 பேரின் முகங்கள் தெரிகிறது.
  • தனது சக ஊழியருடன் சென்ற போது, ஊபர் டிரைவர் தாக்கப்பட்டார்.
Kolkata:

கொல்கத்தாவில் முன்னாள் மிஸ் இந்தியா உஷோஷி செங்குப்தா, இரவில் ஊபர் கேப்பில் சென்ற போது, அவர்களை பின்னால் துரத்தி வந்த ஒரு கும்பல் அந்த கேப்பின் டிரைவரை சரமாரியாக தாக்கியதோடு, உஷோஷியையும் தாக்க முயற்சி செய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2010-ஆம் ஆண்டு, மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் உஷோஷி செங்குப்தா. கொல்கத்தாவை சேர்ந்த இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காவல்துறையினர் மீது பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார். அந்த பதவில், கடந்த 17-ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து நானும் என் சக ஊழியரும் ஊபர் கேப்பில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். 

அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல் எங்களது, ஊபர் காரில் மோதியது. இதன் பின்னர் எங்களது காரை மறித்த அந்த கும்பல், ஊபர் கேப் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கவும் செய்தனர். இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்களை நான் காரில் இருந்து வீடியோ எடுத்தேன். 

பின்னர், வெளியே இறங்கி கூச்சலிட்டேன். அவர்களை நோக்கி வீடியோ எடுத்தப்படியே, எதற்காக ஹெல்மெட் அணியாமல், வந்தீர்கள் என கேள்வி எழுப்பினேன். அப்போது, அந்த கும்பலில் இருந்த வந்த ஒருவன் எனது செல்போனை பறிக்க முயற்சி செய்தான். 

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அருகில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் ஓடி சென்று புகார் தெரிவித்தேன். ஆனால், அவர் அந்த பகுதி தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது இல்லை எனக்கூறி வேறு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி கூறினார். 

பின்னர் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். இல்லையென்றால் அவர்கள் டிரைவரை கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினேன். எனவே அந்த போலீஸ் அதிகாரிகள் வர சம்மதித்தார்கள். தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவர்களை பிடிக்க முற்பட்டபோது, அவர்களை தள்ளிவிட்டு சிறுவர்கள் ஓடிவிட்டனர். 

இத்துடன் இந்த சம்பவம் நிறைவு பெறவில்லை, இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை காலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என டிரைவரிடம் கூறிய நான் என்னையும், எனது சக ஊழியரையும் வீட்டில் இறக்கிவிடும்படி கேட்டுகொண்டேன். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அந்த கும்பல் எங்கள் காரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்களை எங்கள் கார் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தினர். 

என்னை தரதரவென்று வெளியே இழுத்து என்னுடைய செல்போனை உடைக்க முயன்றனர். நான் சத்தமாக கத்தி கூச்சலிட்டேன். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக உதவிக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க பவானிபோர் காவல்நிலையத்திற்கு சென்றேன், அங்கு என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டு புகாரை பெற்றுக்கொண்டனர். ஆனால் ஊபர் டிரைவரின் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். ஒரே நேரத்தில் ஒரு புகாருக்காக இரண்டு எப்ஐஆர் பதிய முடியாது என கூறிவிட்டார்கள்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி படிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கைதானவர்கள் லோக்கல் பகுதியை சேர்ந்தவர்கள், அவர்கள் ஏற்கனவே சில மணி நேரம் சாலை விதிகளை மீறியுள்ளனர். சிசிடிவி கேமிரா துணையுடன் மற்றவர்களையும் விரைவில் கைது செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.