This Article is From Jun 18, 2019

“ஜெய் ஸ்ரீ ராம்…”, “பாரத் மாதா கி ஜே…”- தமிழக எம்.பி-க்களுக்கு எதிராக எழுந்த கோஷங்கள்!

பெரியாரின் பெயரை தமிழக எம்.பி-க்கள் சொல்லும் போதெல்லாம் அவையிலிருந்து ஆளுங்கட்சியினர், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பினார்கள்

“ஜெய் ஸ்ரீ ராம்…”, “பாரத் மாதா கி ஜே…”- தமிழக எம்.பி-க்களுக்கு எதிராக எழுந்த கோஷங்கள்!

திமுக-வினரோ, ‘தமிழ் வெல்க, கலைஞர் புகழ் ஓங்குக, தளபதி வாழ்க’ என்று கோஷமிட்டனர்

17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றியடைந்த எம்.பி-க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடந்தது. இன்று தமிழக எம்.பி-க்கள் ஒருவர் பின் ஒருவராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அப்படி பதவியேற்ற எம்.பி-க்கள், தமிழில் உறுதிமொழியைக் கூறினார்கள். பெரும்பாலான எம்.பி.,-க்கள் உறுதிமொழிக்குப் பின்னர் ‘தமிழ் வாழ்க' அல்லது ‘தமிழ் வெல்க' என்று கூறினர். இதற்கு மக்களவையில் பாஜக-வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களில் சிலர், “பாரத் மாதா கி ஜே…” என்று பதில் கோஷம் எழுப்பினர். 

திமுக-வினரோ, ‘தமிழ் வெல்க, கலைஞர் புகழ் ஓங்குக, தளபதி வாழ்க' என்று கோஷமிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “அம்பேத்கர் - பெரியார் வாழ்க… ஜனநாயகம் - சமத்துவம் மலரட்டும்…” என்று கூறினார். 

அதிமுக-விலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற, ஒரே நபரான தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், உறுதிமொழிக்குப் பின்னர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க், புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்…” என்று கூறினார். 

பெரியாரின் பெயரை தமிழக எம்.பி-க்கள் சொல்லும் போதெல்லாம் அவையிலிருந்து ஆளுங்கட்சியினர், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பினார்கள். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உறுதிமொழிக்குப் பின்னர் சொல்லும் வாசகங்களால் அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. 


 

.