This Article is From Jun 04, 2019

டெல்லியில் மெட்ரோ, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

மெட்ரோ, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: இதனால், டெல்லி அரசுக்கு தோராயமாக வருடத்திற்கு ரூ.700 கோடி செலவாகும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மெட்ரோ, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • கெஜ்ரிவால் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளார்.
  • பயணச்சீட்டு பெற முடிந்தவர்கள் மானியத்தை விடுத்து, பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த திட்டமானது 2-3 மாதத்திற்குள் செயல்படுத்தப்படும்.
New Delhi:

டெல்லியில் மெட்ரோ ரயில், அரசுப் பேருந்துபகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, டெல்லியில் பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, டெல்லியில் மெட்ரோ ரயில், அரசுப்பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

பெண்களுக்கு இலவச சேவை வழங்குவதன் மூலமான செலவை டெல்லி அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி அரசுக்கு தோராயமாக வருடத்திற்கு ரூ.700 கோடி செலவாகும் என தெரிகிறது.

இந்த திட்டத்தின் மூலம் டெல்லியில் 8.4 லட்சம் பெண்கள் அரசுப் பேருந்திலும், 7.50 லட்சம் பெண்கள் மெட்ரோ ரயிலிலும் தினமும் பயணிக்கின்றனர்.

m8bagof

மேலும், இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுபோன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்கள், தங்களால் பணம் கொடுத்து பயண சீட்டு பெற முடியும் என்றால் பெற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் பயணடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசு மட்டுமே மிகவும் நேர்மையான அரசு, உங்கள் பணத்தை உங்கள் வசதிக்காக செலவழித்தும் தொடர்ந்து லாபத்துடனும் இயங்கி வருகிறது.

பெண்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மெட்ரோவில் பயணிப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. எனினும், ஒவ்வொரு படியாக திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. எனினும், இந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

.