முதல்நாள் கூட்டத்தின்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
New Delhi: 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6-ம்தேதி தொடங்கி 15-ம்தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ தேதிகள் பிரதமர் மோடியின் பதவியேற்புக்கு பின்னர் புதிய அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதற்கு பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக் கூட்டம் மே 31-ம்தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 6-ம்தேதி நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடர் தொடங்கினால் அன்றைய தினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.
அதே நாளில் தற்காலிக சபாநாயகர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவர்தான் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 10-ம்தேதி நடைபெறும் என தெரிகிறது.
மே 30-ம்தேதியான வரும் வியாழன் அன்று மாலை 7 மணிக்கு மோடியின் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்போர் பட்டியலில் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக நரேந்திர மோடியும் இடம்பிடித்துள்ளார்.