This Article is From Feb 21, 2019

முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு! - 2 தொகுதிகள் கேட்கும் சிபிஎம்!

மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு! - 2 தொகுதிகள் கேட்கும் சிபிஎம்!

மக்களவை தேர்தல்லுக்கான கூட்டணிக்காக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல், திமுக சார்பில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, திருப்பூர், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விரும்புவதாக தெரிவித்தனர். இந்த தொகுதியை ஒதுக்க முடியாவிட்டால் மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிவிட்டு, தங்களுக்கு உரிய தொகுதிகளை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.

இன்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துவார் என தெரிகிறது.

.