This Article is From Feb 25, 2019

சென்னை தீ விபத்துக்கு காரணம் என்ன? சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி..!

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது.

சென்னை தீ விபத்துக்கு காரணம் என்ன? சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி..!

டிரங்க் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கால் டாக் நிறுவனம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், பிற்பகலில் திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டு, கார்கள் அடுத்தடுத்து பற்றி எரியத் தொடங்கின. இதனால் கரும்புகை ஏற்பட்டதுடன், கார் டயர்கள், சிலிண்டர்கள் உள்ளிட்டவை வெடிக்கத் தொடங்கின. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், விபத்து பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது காலி மைதானத்தின் ஒரு பகுதியில் தீ எரிந்து அப்படியே கார்களை நோக்கி தீ வருவது பதிவாகி இருந்தது. காவலாளிகள் அந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் காலதாமதமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

மேலும், அந்த இடத்தின் பின்பகுதியில் சிலர் குடித்து விட்டு சிகரெட்டை பற்ற வைத்து அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், பெங்களூரு விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் அதிகமான கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க :  சென்னையில் கால்டாக்சி நிறுவனத்தில் தீ விபத்து! - 200 கார்கள் எரிந்து நாசம்!
 

.